அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
வொஷிங்டனில் இலங்கை – இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் பதவியேற்பு விழா இடம்பெற்றது.
முதலில் கமலா ஹரிஸூக்கு முதல் லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் அமெரிக்காவின் முதல் பெண், ஆசிய வம்சாவளி கருப்பின துணை ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹரிஸ் பெற்றுள்ளார்.
கமலா ஹரிஸை தொடர்ந்து அமெரிக்காவின் 46-ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார்.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ரோபேர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதேவேளை, விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளி விதிமுறைகளும் அமலில் இருந்தன.
பதவியேற்பு விழாவில் குறைந்த அளவிலானோரே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
எனினும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப் பதவியேற்வு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
முன்னதாக பைடன் பதவியேற்று விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகப்டரில் அருகில் உள்ள அண்ட்ரூஸ் தளத்துக்குச் சென்ற ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் பைடனுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்து அவர் விமானப் படை விமானத்தில் தனது சொந்த ஊராக புளோரிடா சென்றார்.